More than a Blog Aggregator

Mar 8, 2014

பிரிய முடியாப் பிரிய மண்


பிரிய முடியாப் பிரிய மண்



நதிக்கரைப் பாதைகளை துறந்துவிட்டு
கட்டடக் காடுகளுக்குள்
நான் எதைத் தேடிப் போகிறேன்?

எந்த நறுமண வாசங்களாலும்
கொண்டு வந்து தரமுடியா
எனது மண் வாசத்தை
நானெப்படி விட்டுச் செல்ல முடியும்?

ஒரு வேப்பமரத்தைக் காண முடியா
வலியின் பெருநெருப்பில்
மூச்சுமுட்டிச் சாகிற விதிக்காகத் தானா
விமானமேறப் போகிறது எனதுயிர்?

இயற்கை வரைந்த மென்பச்சை ஓவியங்களை
இங்கே வாட விட்டுவிட்டு
செயற்கைப் புல்வெளிகளில் அமர்ந்து
நானெந்தக் கவிதையை எழுதுவேன்?

இதுவரை
என்னைச் சுற்றிப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளையும்
எனது காலைகளை
தனது காந்தர்வக் குரலால் நிரப்பிய
கருங்குயிலையும் தொலைத்து விட்டு
நானெந்த முகாரியைப் பாடுவேன்?

வெள்ளைத் தோல் மனிதர்களிடத்தில்
என் கிராமப் பாசத்தை
நானெப்படிக் கடன் கேட்பேன்?
ஆங்கிலக் குரல்களுக்குள்
என்னரும் தமிழைத் தேடித் தேடி
நானெத்தனை நாள் தவமிருப்பேன்?

வேப்பம்பூ வடகத்துக்கும்
பலாப்பழச் சுளைக்கும்
எத்தனை நாள் எச்சில் விழுங்குவேன்?
நிலவு விழும் இரவில்
தென்னங்கீற்றுக்கள் அசைய
முற்றத்து மணலில் எப்போது தூங்குவேன்?

அறுகம்புல் வரம்பில் அமர்ந்திருக்கும்
வெள்ளைப் பாற் கொக்குகளின் வரிசையை
எந்தப் பூங்காவில் தேடுவேன்?
அம்மாவின் மடியை
அப்பாவின் இருமலை
அக்காவின் காற்கொலுசு ஒலியை
அண்ணாவின் அதட்டலை
தம்பி தங்கையின் நேசத்தை
தனித்து விடப்பட்ட தேசத்தில்
எங்கே நான் தேடித் தேடி விம்முவேன்?

என்னால் முடியவேயில்லை.
எனது மண்ணை விட்டு
மனசைப் பெயர்த்துச் செல்வதற்கு.

---xxx----

தீபிகா
13.12.2013
2.08 Pm.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக முடியாது...

Post a Comment