More than a Blog Aggregator

Jul 6, 2013

தகவல்யுகத்து மரணங்கள்



தகவல்யுகத்து மரணங்கள்


அவன்
நாளைய பத்திரிகைகளில்
தடித்த எழுத்துடன் தலைப்புச் செய்தியாவான்.
வாராந்த இதழ்களின் முகங்களில்
தன்முகம் காட்டியபடி எங்கும் தொங்குவான்.
செய்வதறியா பார்வையாளனாய்
முகப்புத்தகம்
ஆனமட்டும் தன்மேனியெங்கும்
அவன் பதிவுகளை நிறைத்துக் களைக்கும்.
அவனூரில் தடையுத்தரவு பிறப்பித்து
தன்னிருப்பை சரிபார்த்துக்கொண்டு ஆட்சியடங்கும்.
நீதியான விசாரணை வேண்டுமென்று
கட்சிகள் அறிக்கையிடும்.
வானொலிகள் அவனின் இழப்புச் செய்தியை
வேகமாக வாசித்துக் கொண்டு கடந்து செல்லும்.
ஏதோவொரு தொலைக் காட்சி
அவனின் சாவுடலை நேரலையில் ஒளிபரப்பும்.
நண்பர்கள் கண்ணீர் அஞ்சலியடித்து
மதிற்சுவர்களெங்கும் ஒட்டுவார்கள்.
அவன் முகம் பின்னணியில் மெதுவாயோடும்
நேரலை விவாதத் திரையில்
கருத்தாக்கள் வந்தமர்ந்து
ஒரு மணி நேரம் பேசிச் செல்வர்.
அடுத்தடுத்த வாரங்களில்
அவனுடைய அம்மாவின் கதறல் பேட்டி
அவளின் கண்ணீர் முகத்துடன் வெளிவரும்.
சில வேளைகளில்
அடுத்த மாத நீயா நானாவில்
அவன் பெயரடிபடும்
ஒரு பொது விவாதமும் நடந்து முடியும்.
அவனை நேசித்த உறவுகளின் இதயங்கள்
அவனைப் பற்றிய அழுத்தும் நினைவுகளை
கண்ணீர்வழி கீழிறக்கி வைத்து
மெல்ல மெல்ல விடுபட்டு வெளிவரும்.

அவ்வளவும் தான்.

அத்துடன்
அவனை எல்லோரும் மறந்து போய்
அடுத்துவரும்
இன்னொரு பரபரப்பான முகத்தை
சுமந்து செல்ல தயாராகிவிடுவார்கள்.

---xxx---


தீபிகா
04-07-2013
07.57 Pm.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

யதார்த்தமான உண்மை...

Post a Comment