More than a Blog Aggregator

Jun 19, 2013

வெள்ளைப் பலி

வெள்ளைப் பலி


ஏணைக்குள் தூங்கிக் கிடந்த
தன் தம்பிக் குட்டியை
தூக்கம் கலையாமல் துணி விலக்கி
நெற்றியில் முத்தமிட்டுச் சென்றிருக்கலாம்.

சாப்பிட்ட கேக்துண்டின் பாதியை
பின்னேரம் வந்து சாப்பிடுவதாக
மிச்சம் வைத்துவிட்டு கிளம்பியிருக்கலாம்.

தான் வளர்க்கும் செல்லப் பூனைக்குட்டிக்கு
மறவாது பால் வைக்கும்படி
அம்மம்மாவிற்கு சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

இன்று மாலை
புது புத்தகப்பை வாங்கித் தருவதான உறுதியை
தன் அப்பாவிடம் பெற்றுச் சென்றிருக்கலாம்.

நேரம் போவதறியாமல்
சுட்டிரீவி பார்த்துக் கொண்டிருந்ததற்காய்
திட்டு வாங்கிக் கொண்டு புறப்பட்டிருக்கலாம்.

அவசரமாய் புறப்பட்டு விட்டு
திரும்பியோடி வந்து
அம்மாவின் கன்னங்களை
முத்தங்களால் நிறைத்துவிட்டுப் போயிருக்கலாம்.

வந்துகொண்டிருக்கிற பிறந்தநாளின் திகதியை
இன்றுமொரு முறை நாட்காட்டியில்
தொட்டுப் பார்த்து விட்டுக் கிளம்பியிருக்கலாம்.

வாசல் மறையும் தெரு வளைவில்
வழக்கம் போல திரும்பி மீண்டுமொரு தரம்
முத்தங்களை பறக்கவிட்டுவிட்டு மறைந்திருக்கலாம்.

இப்படி எவற்றையும்
இனி காலமெல்லாம்
நினைத்து நினைத்து அழுது கரைவதற்காய்
பள்ளிக்குப் போன அந்த வெள்ளைப் பிள்ளைகள்
எங்களுக்காய் விட்டுப் போயிருக்கலாம்.




தீபிகா
19-06-2013
3.46 P.m



-----------------------------------------------------------------------------
19-10-2013
செய்தி - புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு லோடு ஆட்டோவில் மாணவ, மாணவிகள் 12 பேர் லிப்ட் கேட்டு சென்றுகொண்டிருந்தனர்.
வளநாடு என்று இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த பி.எல்.ஏ. நிறுவன தனியார் பேருந்து மோதியதில் லோடு ஆட்டோ அப்பளமாக நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 மாணவ மாணவிகள் பலியானார்கள். மேலும் 4 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
(நக்கீரன்) (படம் - பகத்சிங்)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை அளிக்கும் சம்பவம்...

Post a Comment