More than a Blog Aggregator

May 30, 2013

எழுத்தாளர்களே! வேண்டாம்.



எழுத்தாளர்களே! வேண்டாம்.





எழுத்தாளர்களே!

வேண்டாம்.
உங்களின் ஏதாவொரு வரியில்
கட்டுண்டு போனவர்கள் நாங்கள்.
உங்களை நம் கற்பனைகளின்
உயரத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
கீழே விழுத்தி விட சம்மதமில்லை.

வேண்டாம்.
உங்களைப் பற்றி
நாம் எதுவுமே அறிய வேண்டாம்.
உங்களின் எழுத்துக்களில் அழகு கண்டு
காதல் கொண்டவர்கள் நாங்கள்.
அந்த தீராக் காதலில்
நாங்கள் தோற்றுப் போக விருப்பமில்லை.

வேண்டாம்.
வாழ்வின் பாரத்தை
வார்த்தைகளின் ஈரத்தால் நிரப்பிக் கொள்ள
புத்தகங்களை நேசிப்பவர்கள் நாங்கள்.
சமூகம் கிழித்த வாழ்வின் காயங்களுக்கு
களிம்பு தடவுவதற்காக வாசிப்பவர்கள் நாங்கள்.
மீண்டும்
புண்களால் வலியுற சம்மதமில்லை எங்களுக்கு.

வேண்டாம்.
தெரிந்த அரசியல் வாதிகளாலும்...
தெரிந்த வியாபாரிகளாலுமே..
நாங்கள் வெம்பிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் விம்மியழ முடியவில்லை மனசுக்கு.

வேண்டாம்.
உங்கள் எழுத்து முகங்களில்
மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம்.
அந்த மரியாதைக் கண்ணாடிகளில்
உங்கள் சுயமுகங்களின்
விம்பங்கள் விழுந்து கீறல் விழவேண்டாம்.

வேண்டாம்.
எழுத்துக்கும் உங்களுக்கும் இடையில்
எந்த இடைவெளிகளுமில்லா மனிதர்களாய்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என
நாம் ஏதோ நம்பிக்கொண்டிருக்கின்றோம்.
அந்த நம்பிக்கையை சாகடித்து விடாதீர்கள்.

வேண்டாம்.
ஆத்ம திருப்திக்காக புத்தகங்களை
கையிலெடுத்தவர்கள் நாங்கள்.
ஈரமுள்ள மனிதர்களை
எழுத்துக்களுக்குள் தேடி வந்தவர்கள் நாங்கள்.
எங்களை ஏமாற்றி விடாதீர்கள்.

வேண்டாம்.
உங்களின் முகங்களை
நாங்கள் ஒருபோதும் பார்க்கவே வேண்டாம்.
உங்களின் வாழ்க்கை பற்றி
நாங்கள் ஒருபோதும் அறியவே வேண்டாம்.
உங்களின் வியாபாரங்கள் பற்றி
நாங்கள் ஒருபோதும் தெரியவே வேண்டாம்.
உங்களின் செய்கைகைள் பற்றி
நாங்கள் ஒருபோதும் கேட்கவே வேண்டாம்.

 
----xxx-----


தீபிகா
29-05-2013
05.17 P.m

May 29, 2013

துணைக்கு யாருமற்றவனின் இரவுப் பொழுது



துணைக்கு யாருமற்றவனின் இரவுப் பொழுது


மெனனப் பின்னிரவில்
அனுமதியின்றி யன்னல் புகுந்து விழும்
அறைச்சுவரின் நிலவொளியில்
விட்டுவிட்டு நடனமாடுகின்றன
கறுப்புத் தென்னங் கீற்றுக்கள்.


தூரத்துத் தெருவொன்றிலிருந்து
பயங்கரமாய் வந்து சேர்கிறது
நாய்களின் நள்ளிரவு ஆலாபனை.

முழுதாய் திருகி முடிக்காத
தண்ணீர்க் குழாயின் கண்ணீர்த் துளியை
சத்தமாய் ஏந்திக் கொள்கிறது வெறும்வாளி.

கண்ணாமூச்சி விளையாட்டில்
இன்னுமென்னிடம் பிடிபடாதிருக்கின்ற
கரப்பான் பூச்சியொன்று
கைகளை சுரண்டிவிட்டு ஓடுகிறது.

கூட்டை விட்டு வெளிக் கிளம்பி
என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாய்
கிட்டக் கிட்டக் கேட்கிறது
விநாடிக் கம்பியின் கர்ச்சிப்பு.

வெட்கம் மறந்து கதறுகிற
இரவுப் பெண்பூனை
பாலுக்கு வீரிட்டழுகிற ஒரு பஞ்சுக் குழந்தையை
என் கைகளில் தந்து விட்டு ஒளிகிறது.

மூலைச் சுவரோடிருக்கிற தென்னைமரம்
தன் வியர்வை அரிச்சலை
கூரை விளிம்பில் சுருதி பிசகாமல்
தேய்த்துக் கொண்டே இருக்கிறது.

சுவர் மேடையில் நடந்த
பல்லிகளுக்கான நள்ளிரவுக் குத்துச் சண்டையில்
எல்லைக் கோட்டைத் தாண்டி
என்னருகே “தொப்” என்ற சத்தத்துடன்
விழுந்த கிடக்கிறது ஒரு வீரப்பல்லி.

சுருதி விலகாத தாளக்கட்டுப்பாடு
பாடிக் கொண்டே போகிறது
நெடுந்தூரப் புகைவண்டி.

வானக் கிளையிலிருந்து
நட்சத்திரப் பூவொன்று
வேரை நோக்கி சிரித்துக்கொண்டு விழுகிறது.

பாம்பு ஊர்வதான பிரமையில்
போர்வையை வெடுக்கென உதறிவிட்டு
படபடக்கிறது கால்.

வலப்பக்கம் வைத்துவிட்டுப் படுத்த செல்பேசியை
இடப்பக்க படுக்கையெங்கும் தடவுகின்றன
தூக்கக் கைகள்.

அமைதியாய் ஊற்றுகிற ஒருமிடறு தண்ணீர்
தொண்டைக் குழியை
பேரிரைச்சலோடு கடப்பதாய்
செவிகள் அலறுகின்றன.

கொஞ்சம் பெய்யலாம் போல இருக்கிற
என் நீர்மழையையும்
விடாது அடக்கி வைத்திருக்கிறது
இரவுப் பயம்.


---xxx ---

தீபிகா.
25-05-2013
12.28 P.m







May 28, 2013

எப்படி இருக்கிறீர்கள்?

எப்படி இருக்கிறீர்கள்?


புகழ் எனப்படுவது கூட ஒரு வகை போதை தான். நான் கொண்டாடப்பட வேண்டும் என்றும்,நான் மதிக்கப்பட வேண்டும் என்றும் எண்ணும் மன இயல்பு ஒரு வித முற்றிய நோய்க் கூறே. மரியாதை என்பதும் அன்பைப் போலவே கேட்டு பெற முடியாத உணர்வு. நம் ஒழுக்கமும், ஒழுங்குமே அதை பெற்றுத் தரும். நாம் புத்திசாலிகளாகவும், பலசாலிகளாகவும் இருக்கின்றோமா? என்று சுய பரிசீலனை செய்வதற்கு முன்னர் நல்ல பண்பாளர்களாக இருக்கின்றோமா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லோரும் எம்மைப் போன்று இருக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது சுத்த மடைமைத் தனம்.
பதில் சொல்லுதல் என்பது கூட ஒரு வகை கலையே. ஒரு குழந்தைக்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்பதும், ஒரு வெறிகாரனின் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதும் ஒரு பக்குவப்பட்ட மனிதனுக்கு தெரிந்திருக்க வேண்டும். நாம் வாழும் சமூகம் என்பது படித்த மானிடர்களால் தான் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது குருட்டுத்தனம் மிக்க தவறான சிந்தனாவாதம். வாசிப்புக் கலை ஒரு மனிதனின் அறிவை உயர்த்தும் என்பது எவ்வளவு உண்மையோ அதை விட ஆயிரம் உண்மையானது நேசிப்புக் கலை தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் என்பது.

தம்மை அறிவாளிகள் என்று சொல்லி கொள்கிறவர்கள் முதலில் பழக்கப்பட்டிருக்க வேண்டியது ஒரு படிக்காத பாமரனை எப்படி கையாளுவது என்பதையே. ஒரு அணு விஞ்ஞானிக்கு கூட படிக்காதவனிடமிருந்து கேட்டுக் கற்றுக் கொள்ள எத்தனையோ அனுபவக் குறிப்புக்கள் இருக்கக் கூடும். சமூகத்தின் பொறுப்பு மிக்க பதவிகளில் தாம் இருப்பதாக உணர்கிற புத்திசாலி மனிதர்களுக்குரிய முதற் தகுதியே ஒரு சமூகத்தில் அங்கம் வகிக்கிற எல்லா வகையான மனிதக் கூறுகளையும் வெற்றிகரமாக கையாளத் தெரிந்திருத்தலே.

தான் வாழும் சமூகத்தை பக்குவமாக வளர்த்தடுத்துச் செல்லத்
தெரியாத எந்தப் பெரிய மேதையும் அவருடைய
ஆற்றல்களாலும், விருதுகளாலும், பதவிகளாலும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. எத்தனை உலகத் தரமான இலக்கியங்களை அவர் கரைத்துக் குடித்திருந்தாலும் தன் சமூகத்தின் மொழியைப் புரிந்து கொள்ள முடியாதவரால்அந்தச் சமூகத்திற்கு எந்தவித பலனும் கிடைக்கப் 
போவதேயில்லை.

ஒரு உண்மையான அறிவாளி என்பவனுக்கும், தன்னை தன் சமூகத்தின் பிரதிநிதி என்பவனுக்கும், உண்மையான பெருமை என்பது "தான் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்றிச் செல்லுதல்" என்பதுவே. அந்த நற்செயலை புரிகிற பெரு மகனை அவன் வாழும் சமூகம் முதல் அகிலமுமே போற்றிப் புகழும்.

அதற்கு அடிப்படைத் தேவை அறிவு அல்ல.
பேரன்பும், நற்பண்பும், சகிப்புத் தன்மையுமே.
---xxx ----


தீபிகா
27-05-2013
10.28 P.m


May 27, 2013

கண்களின் பயணம்

கண்களின் பயணம்



ஓடும் முகில்களில் 
உருவங்களை எதிர்பார்க்கும் கண்கள்.
சத்தமின்றி பறந்து போன 
ஜெற் விமானத்தின் புகை நீளத்தை 
தொடர்ந்து செல்லும் கண்கள்.
கடந்து போகிற ரயிலின் பெட்டிகளை
அவசரமாய் கணக்கெடுக்கும் கண்கள்.
நிலவின் கறையில் 
உருவத்தை தேடும் கண்கள்.
வரிசையாய் போகும் 
எறும்புகளின் முடிவிடங்களை
தேடித் தொடர்ந்து செல்லும் கண்கள்.
கவர்ச்சிகளில் 
அவசரமாய் தங்கிப்போகும் கண்கள்.
பேரூந்துகளில்
பிடித்துப் போன ஒருமுகத்தை
பிரியும் வரைக்கும்
விட்டுவிட்டு தொடரும் கண்கள்.

கண்கள் பயணித்துக் கொண்டேயிருக்கின்றன.
என்றும் மாறாத தம் விருப்பப் பாதையில்.
---xxx----


தீபிகா
19-05-2013
06.04 P.m


May 26, 2013

சௌந்தர்யக் குரல் அழகா!

சௌந்தர்யக் குரல் அழகா! 
(இரங்கற்பா)




சௌந்தர்யக் குரல் அழகா!
எங்கள்
சந்தனத் தமிழ்க் குரலா!
சாத்திக் கொண்டாயோ உன் விழிக்கதவை.

கம்பீரக் குரல் வேந்தா!
எங்கள்
கன்னித் தமிழை கணீர்க் குரலில்
கூவித் திரிந்த குயில் மொழியா!
கூடுவிட்டுப் போனதுவோ உன் ஆன்மா!

பட்டை தீட்டிய பெரு நெற்றியும்
பதித்து வைத்த சந்தனப் பொட்டழகும்
சிவந்து மிளிரும் செங் குங்குமமும்
தரித்து நீ மேடை வந்தால்
தமிழே அழகு பெறும்.
சிலையாய் இருக்கின்ற
கலைத்தாயே எழுந்து வந்து
கவிபாடும் தோற்றம் பெறும்.

உன்நாவில் தமிழ் ஒலித்தால்
உச்சரிப்பு அழகொளிரும்.
உணர்வுடன் நீ பாடுகையில்
உள்ளங்கள் உருகி நிற்கும்.

முருகா... என்று நீ
அழைத்துப் பாடுகையில்
அருகே கடவுள் வந்தது போலிருக்கும்.
ஆயிரம் தடவை கேட்கலாம் எனத்தோன்றும்.

எழிலிசை வேந்தா!
எட்டாத குரல் மொழியா!
நீ மெட்டெடுத்து பாடுகையில்
மேதினியே அமைதி பெறும்

காந்தர்வக் குரல் குயிலா! 
கர்வமில்லா சிரிப்பழகா! 
நாப்பது ஆண்டுகளாய்
நம் தமிழை இசைத்த - தமிழ்
நாக்குடைய பெருமனிதா!

ராதா என்னை விட்டு ஓடாதேடி...
நாதா! நீ பாடிய முதல் பாடல் அது.
சாதான் உன்னுடலை பிரித்தது. - எம்மோடு
நீதான் குரலால் நீக்கமற நிறைந்திருப்பாய் போ.

கற்பனை என்றாலும்..கற்சிலை என்றாலும்...
கற்கண்டு குழைத்த தமிழ்க் குரலில் 
நீ பாடினால் கண்ணில் நீரொழுகும்.
உள்ளம் உருகுதய்யா நீ உச்சரித்தால்
இன்றும் உயிர் உருகி கரைந்தோடும்.

பொன்னகை அணிந்து மேடைகளில் ஜொலித்தவரே!
உங்கள்
புன்னகை அதைக் காட்டிலும்
ஆயிரம் அழகு பெறும் தெரியுமா?

வாலியை அழைத்து வந்து தந்து
வண்ணத் தமிழுக்கு வளம் சேர்த்தவர் நீங்கள்.
வசந்த மாளிகையில் யாருக்காக? பாடிய
வண்ணக் குரலுக்கு சொந்தக்காரா!

நீ அழுது பாடினால்...
நாங்களும் அழுதோம்.
நீ சிரித்துப் பாடினால்
நாங்களும் சிரித்தோம்.
உன்குரல் சொன்ன தத்துவங்களை
எங்கள் வாழ்வின் வேதங்களாய் சுமந்தோம்.

எந்தப் பெருமைகளும் இல்லாது
நீ தொலைக்காட்சிகளில் வந்திருப்பாய்.
வலிக்காமல் வார்த்தை சொல்வாய்.
குழந்தை கலைஞரோடு குழந்தையாகி நீ மகிழ்வாய்.
தட்டிக் கொடுத்துநீ தவறாமல் பாராட்டுவாய்.

கண்ணதாசன் எழுதிய
கடவுள் சாகவேண்டும்
என்ற வரியை
பாடமறுத்த கொள்கைக் காரா!
உன் தீர்க்கமான பிடிவாதத்தால்
வாடவேண்டும் என்று மாற்றித் தந்தாராமே
அந்த வரலாற்றுக் கவிஞன்.

நீ இருப்பாய். நிலைத்திருப்பாய்.
எங்கும்
நீக்கமற நிறைந்திருப்பாய்.

உன் குரல் உலகெங்கும்
தினம் உச்சரித்தபடி தானிருக்கும்.
உன் பாடல் இல்லாத நாளொன்று
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் விடியாது.

போய்வா குயிலே போய்வா.
நீ கும்பிட்ட இளங்குமரன் கூப்பிட்டுப் போகிறாய்.
போய்வா. இசையே போய்வா.

உன் பாடல்களில்
சங்கீதம் உன்னைச் சுமந்து செல்லும்.
உன் உச்சரிப்பில்
தமிழ் உன்னை நினைந்து கொள்ளும். 




----xxx-----

தீபிகா
25-05-2013
06.35 P.m



May 25, 2013

அழகு

அழகு



போலியான புன்னகைகளை காட்டிலும்
நிர்வாணமான கோபங்கள் அழகு. 

போலியான புகழ்ச்சிகளை காட்டிலும்
நிர்வாணமான விமர்சனங்கள் அழகு.

போலியான நட்புக்களைக் காட்டிலும்
நிர்வாணமான ஏகாந்தம் அழகு.

போலியான கோசங்களைக் காட்டிலும்
நிர்வாணமான அமைதி அழகு.

போலியான அன்பைக் காட்டிலும்
நிர்வாணமான தனிமை அழகு.

போலியான கற்பனைகளைக் காட்டிலும்
நிர்வாணமான உண்மைகள் அழகு.

போலியான சத்தியங்களைக் காட்டிலும்
நிர்வாணமான நிராகரிப்புக்கள் அழகு.

போலிகள்
தற்காலிக அழகுடைய நிரந்தர வலிகள்.

நிர்வாணங்கள்
தற்காலிக வலியுடைய நிரந்தர சுகங்கள்.

....xxx....


தீபிகா
19-05-2013
06.47P.P.m



May 21, 2013

என் பாலகத் தோழியும் மயிலிறகுகளும்


என் பாலகத் தோழியும் மயிலிறகுகளும்



ஒரு காலத்தில்
எங்கள் நட்பின் பரிசுப்பொருளாய் இருந்தது
இந்த மயிலிறகுகள் தானே தோழி.

நீ என்னிடம் வாங்கிய கர்ப்பிணி மயிலிறகு
குட்டி போட்ட சந்தோசத்தை
பள்ளிக்கூடம் ஆரம்பித்த பிரார்த்தனைக் காலையில்
இரகசியமாய் காதுக்குள் ஓடிவந்து சொன்ன நிமிடங்களை
ஞாபகமிருக்கிறதா தோழி உனக்கு?

என் சைவப் புத்தகத்தில் முருகன் வைத்திருந்த
அதே மயில் படத்தின் பக்கத்துக்குள்
பென்சில்பூ தீட்டி தீட்டி போட்டு வளர்த்த
என் மயிற்குஞ்சுகளை
உனக்கின்னும் ஞாபகமிருக்கிறதா தோழி ?

சூரிய ஒளிபட்டு என் குஞ்சு மயிலிறகுகள்
கறுத்துப் போய்விடுமென்று
உன்னை என்னருகே அழைத்து
எம் முகங்கள் உரசிக்கொள்ள
மெதுவாய் திறந்து காட்டிய
என் மயிற்குஞ்சுகளை
இப்போதுமுனக்கு ஞாபகமிருக்கிறதா தோழி.

என் பென்சில் சீக்கிரம் முடிகிற இரகசியத்தை
அப்பா கண்டுபிடித்து அடித்தபோது
விழுந்த தழும்பை
உன்னிடம் வந்து விம்மியபடி காட்டிய போது
மெதுவாய் என் உள்ளங்கை தடவி கண்கலங்கினாயே நீ.
ஞாபகமிருக்கிறதா தோழி.

குட்டிபோட்ட பின் திருப்பித் தருவதாய்
நீ என்னிடம்
கடைசியாய் கடன்வாங்கிய
பொன்னிறம் மின்னும் நீள மயிலிறகை
நீயும் தொலைத்து விட்டாயா தோழி?

இப்போது எனக்காய்.... ....

மயிலிறகுகளும் இல்லை.
நீயும் இல்லை.
பள்ளிக்கூடமும் இல்லை.

நான் மட்டும் தனியே இருந்து
அழுது கொண்டிருக்கிறேன் தோழி.


---xxx----

தீபிகா
19-05-2013
6.31 P.m

May 18, 2013

முள்ளிவாய்க்கால்(ப்) பள்ளிக்கூடம்


முள்ளிவாய்க்கால்(ப்) பள்ளிக்கூடம்




காற்றே!
எம் துயரின் பாடலை உரத்துப் பாடு.
வானமே!
எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள்.
கடலே!
எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல்.
நெருப்பே!
எம் நெஞ்சத்து தீயையும் சேர்த்து எரி.
நிலமே!
எம் சோகங்களின் பாரங்களையும் தாங்கிக் கொள்.


காலமே!
நீ கைவிட்ட சனங்களது காயங்கள்
இன்னும் ஆறாமல் கிடக்கிறது பார்.
விதியே!
நீ விரித்த வலையில் விழுத்திய புறாக்கள்
இப்போதும் துடித்துக் கிடக்கிறது காண்.

வானத்தின் சாட்சியாய், வரலாற்றின் சாட்சியாய்,
வாரிக் கொடுத்த வள்ளல்கள் சாட்சியாய்,
வாரிவிட்ட கள்ளர்கள் சாட்சியாய்,
நம்பிக் கழுத்தறுத்த கயவர்கள் சாட்சியாய்,
நடித்துக் கெடுத்த நடிகர்கள் சாட்சியாய்,
குள்ளநரிக் கூட்டத்து குடிமகன்கள் சாட்சியாய்,
கண்ணை மூடிப் பால் குடித்த
கள்ளப் பூனைகளின் சாட்சியாய்
நம்மை நாமிழந்து, நம் சொந்தங்களை இழந்து
வாழ்ந்த மண்ணிழந்து, வரலாறு இழந்து
காலப் புத்தகத்தின் கணக்கினிலே இன்று
நான்கு ஆண்டு ஆயிற்று.

நேற்றுப் போல் இருக்கிறது
நெஞ்சில் நெருப்பெரிகிறது.
தேற்றுவார் இன்றி மனம்
தேம்பித் தேம்பி அழகின்றது.
நாற்றுப் போல் இருந்த நம்மிளங் குழந்தைகளை
கூற்றுவர் கொண்டுபோன குரூரக் காட்சி விரிகிறது.

சேற்றினிலே குற்றுயிராய் கிடந்த முகங்கள்
சேனைகளின் குண்டினிலே சிதைந்த அங்கங்கள்
வீற்றிருந்த கடவுள்களின் விழுந்தழிந்த சொரூபங்கள்
விதைந்து மண்ணில் புதைந்த விடுதலையின் கரங்கள்
சிதைந்து கிடந்த கிராமத்து இடங்கள்
எல்லாம் சுமந்து கிடக்கிறது எம் எண்ணங்கள்.

மறக்க முடியுமா? மறக்க முடியுமா?
மனதெங்கும் வழியும் காயத்தின் குருதியை
காலநதி வந்து கழுவ முடியுமா?
சுமந்த சிலுவைகள், சுரந்த கண்ணீர்கள்,
இறந்த உறவுகள், இழந்த சிறகுகள்,
குழந்தை குட்டிகள், குமர் குஞ்சுகள்,
குன்று மணிகளாய் சிதறிக் கிடந்ததை
கண்டு வந்த கண்கள் மறக்குமா?
காயத் தழும்புகள் ஆறிப் போகுமா?

புத்தனின் பிள்ளைகள் புரிந்த போர்நடனத்தில்
செம்மண் புளுதியில் செத்தநம் உறவுகள்
மீள முடியுமா? உயிர் நீள முடியுமா?
யுத்தம் முடிந்தது. சித்தம் மகிழந்தது.
புத்தம் உமக்கு மறுவாழ்வு தந்தது.
புத்தம்புது வாழ்வு இனி மலர்ந்தது
என்று சொல்லிடும் ஏமாற்று நரிகளே!
”ஓமோம் சாமி”போடும் ஓநாய்க் கூட்டமே!
நாமெம் நிலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை
நந்திக்கடல் மடி நீந்திய நாட்களை
இரக்கம் இன்றிநீர் கொன்ற உயிர்களை
இழக்கச் செய்த உடல் உறுப்பினை
இனிமேல் கொண்டு வந்திட முடியுமா?
இழந்தநம் வாழ்வை தந்திட முடியுமா?

யுத்தம் நடத்திய செத்த வீட்டினில்
செத்துக் கொண்டு நாம் இருக்கையில்
சத்தம் இன்றி பார்த்துக் கொண்டிருந்தவர்
சதங்களை கொஞ்சம் கிள்ளி எறிகிறார்.
சரியாய் போயிடும் இனிமேல் என்கிறார்.
பாவம் செய்த கைகளை மெல்லப்
பணத்தினில் கழுவி கறையை நீக்கிறார்.
அள்ளிக் கொடுத்த வன்னித் தமிழனுக்கு
கிள்ளிக் கொடுத்து கிடுகும் கொடுக்கிறார்.

யுத்தம் குடித்து சிந்திய ரத்தம்
வெள்ளை மண்மீது ஊறிக் கிடந்ததை...
பிள்ளைத் தாச்சியின் வயிறு கிழிந்து
பிறக்காக் குழந்தையின் கால் வெளிவந்ததை...
முலைப்பால் கேட்டு அழுத குழந்தைக்கு
மழைப்பால் பிடித்து அருந்தக் கொடுத்ததை...
கலைத்தாய் வாழ்ந்த கல்விக் கூடமும்
சிலையாய் இருந்த கடவுள் இல்லமும்
சிதறி நொருங்கி சிதைந்து கிடந்ததை...
தண்ணீர் கேட்டு தவித்த நாவுகள்
தாகத்தோடு குளநீர் குடித்ததை...
கண்ணீர் வழிந்த கன்னத் தசைகளில்
கையால் தொட்டு உப்புச் சுவைத்ததை...
மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?
இறக்கும் வரைக்கும் இறக்கி வைக்க
முடியாச் சோகம் இருக்கும் வரைக்கும்
உறக்கம் கூட சரியாய் வருமா?
உயிரே உன்வலி எழுத முடியுமா?

வானம் பார்த்து வாடிக் கிடந்தவர்
காயத்தோடு கைகூப்பித் தொழுததை...
காப்பாற்றென்று கதறி அழுததை...
கஞ்சிக்கரிசி கிடைக்கா வறுமையில்
கண்டதையெல்லாம் திண்டுயிர் வாழந்ததை....
காசிருந்தும் பொருளேதும் இல்லா
காலச் சோகத்தில் அலைந்து திரிந்ததை...
உமிக் கும்பிக்குள் உலைக்கு நெல் புடைத்ததை...
ஊசி மருந்தின்றி உயிர்கள் மறைந்ததை...
காயப்பட்டவர் கிடந்து முனகிய கொட்டிலின் கட்டிலில்
கொத்துக்குண்டு விழுந்து வெடித்ததை...
நேசித்த உறவல்லாம் ஒவ்வொன்றாய் சாக
யாசித்து யாசித்து வான்பார்த்து அழுததை...
பேசித்தீர்க்க முடியாச் சுமைகளில்
பேதையாய் எங்கும் அலைந்து திரிந்ததை...
சண்டை வந்து சமருக்கு இழுத்த
அண்டை வீட்டு அருமந்த பிள்ளை
அடுத்த நாளே அமைதியாய்ப் படுத்து
அடுப்படிக் கரையால் விழிமூடி வந்ததை....
அண்டை நாட்டு உறவுகள் கூட
ஆயிரந் தடைவைகள் கத்திக் குளறியும்
வந்தெமைக் காத்திடா வரலாற்றுத் துயரை....
கைகள் உயர்த்தி கண்ணீர் சுமந்து
விதியின் சதியில் சரண் அடைந்தவர்கள்
இதுநாள் வரைக்கும் இருக்கிறார் என்றோ
தெரியா வலியில் தேம்பும் கதைகளை...
யுத்தம் முடித்தபின் புத்தனை இருத்தி
சட்டம் தன்னை தாங்கள் எடுத்து
நித்தம் அடிமையாய் எமை நடத்தும்
நீதியற்ற படைகள் பிடித்த
பாதிப்பேர் கூட மீளா உண்மையை...
நான்காண்டினில் நாம் மறப்போமா?
நாளையும் கூட நினைவிழப்போமா?

முள்ளிவாய்க்கால் என்பது
ஈழத்தமிழரைப் பொறுத்த வரைக்கும் 
வெறும் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது.
அது பள்ளிக்கூடம்
வரலாற்றுப் பள்ளிக்கூடம்.

வண்ணத் தமிழ்க் கவிஞா வைரமுத்துவே!
நீ எழுதிய
கள்ளிக் காட்டு இதிகாசம் தாண்டி
ஆயிரம் கள்ளிக் காட்டு இதிகாசங்கள்
முள்ளிவாய்க்கால் மண்ணில்
இப்போதும் முனகிக் கொண்டே இருக்கும்.
ஒருமுறை சென்று பார்த்து வா.
எங்கள் கனத்த துயரத்தின் வரலாறு
அந்தச் சிவப்பு மண்ணில்
சிலவேளை உனக்காகவும் காத்திருக்கக் கூடும்.

---xxx----xxx------ 

தீபிகா.
18-05-2013
11.36 A.m
Theepajeevan@gmail.com