More than a Blog Aggregator

Jan 25, 2012

நெருப்பெடுத்துக் கொடுத்த கைகள்




குடிசைகளை கொழுத்துவதற்கு
நெருப்பெடுத்துக் கொடுத்த கைகள்
சாம்பல்களை தட்டிவிட்டு
கட்டடங்களுக்கான அடிக்கல்
நாட்ட வருகின்றன.



நாடகமாட வரிகிற நரிகள்
கொலைவெறிப்பாட்டுக்கு நடனமாடி
எம்மை மகிழ்விக்கலாமென சொல்லிக்கொண்டு,
உங்களையும் கூட்டி வந்துவிடக்கூடும்.
தயவு செய்து யாருமெம் நிலத்துக்கு
அப்படி வந்து
மீளமீள மொழியையும் காயப்படுத்தாதீர்கள்.
முடிந்தால்...
எம் மண்ணிலாடிய கொலைவெறிஞர்களுக்கு
ஒரு தீர்ப்புக் கொண்டு வாருங்கள்.

அழித்தலின் போது
காத்தல் பற்றி சிந்திக்காதிருந்த
எல்லா சிந்தனையாளர்களும்
இப்போ
அனுதாபக் கைக்குட்டைகளை மடித்துக்கொண்டு
அருள வருகிறார்கள்.
நாங்கள் எதிர்பார்த்திருக்காத
அவர்கள் தரும்
கைக்குட்டையின் பரப்பளவை விட
எம் கண்ணீரின் கனவளவு
அதிகமதிகம்.

அடிக்கடி ஓடிவந்து
கைகுலுக்கி...கட்டிப்பிடித்து...
முடிந்தால், அதிகபட்சம்
அரச அம்புகள் துளைத்த
சுவர்களின் ஒட்டைகளை
பூசிமெழுகி, புதுவண்ணமடித்து
புதிய கட்டடத்தை திறந்துவைத்ததாக
புகைப்படம் எடுத்துப் போகிற
விளம்பரப்பட நடிகர்களை விடுங்கள்.

உலகத்துக்கு தெரியாவிடினும்
எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அவர்களால்
எங்களுக்கு எதுவுமே ஆகப்போவதில்லையென்று.

கொத்துக் குண்டுகளை போடச் சொன்னவர்கள்
கொண்டுவந்து தருகிற பூங்கொத்துக்களில் கூட
முட்கள் இருக்கலாமென்ற பயத்தில்
வாங்கத் தயங்குகின்றன நம் விரல்கள்.
எங்களை கிள்ளுகிறவர்கள் தான்
நம் தொட்டிலையும் ஆட்டுகிறார்கள் என்பது
நம் குழந்தைகளுக்கும் கூட புரிகிறது.

நமது பறவைகள்
சிறகுகளோடிருந்த போது
தூங்கிக்கிடந்த விஞ்ஞானியொருத்தர்
இப்போ
மயிர்களும் பிடுங்கப்பட்ட பிறகு
வந்து தூவுகிறார்.
கனவுகள் காண்பது பற்றிய
பிரசங்கச் சொற்களை.

துடிக்கத் துடிக்க எம் மரக்கிளைகளில்
துளைகளை போட்டுவிட்டு
இனிமேல்
எல்லாம் மறந்து வாருங்கள்.
புல்லாங்குழல் இசைக்கச் சொல்லித்தருவதாக
சொல்கிறார்கள்.
எப்படி ஏற்றுக்கொள்வது?

நாம் வளர்த்த விருட்சங்களை
எரிகுண்டுகள் விழுங்கி பசியாறிய போது
தண்ணீரடித்து அணைக்க வராதவர்கள்
இப்போ
பட்டமரங்களில் கட்டுமரங்கள்
கட்டித் தருவதாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

எல்லாமுணர்ந்து
ஏதுமற்றிருக்கிறது எம் எரிமனம்.

நான்கு திசைகளிலும்
சிங்கங்களை காவலிருத்திவிட்டு
அதற்கு கீழிருந்து ஆட்சிசெய்பவர்களுக்கு
நாமெப்போதும்
நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

ஏனெனில்...அவர்கள்...
சிங்களம் சிவப்பாக்கிய செம்மண்ணில்
நாம் துடிதுடித்துக் கொண்டிருந்த போது
பார்த்துக்கொண்டிருந்தாலும்
அதே காலத்தில் எங்களின் மொழியை
செம்மொழியாக்கி தந்தவர்களல்லவா.

---xxx----


தீபிகா.
3.15 a.m

21-01-2012.






7 comments:

Marc said...

சமூகத்தைசாடும் அருமையான வரிகள்.வாழ்த்துகள்.

முல்லை அமுதன் said...

SUPPER.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

கீதமஞ்சரி said...

சுருக்கென்று தைக்கின்றன வரிகள். வலியென்னவோ உங்களுடையதை விடவும் குறைவாகத்தான் இருக்கக் கூடும். மனக்குமுறலை வார்த்தைகளில் வெளிப்படுத்திய விதமும், இறுதியில் தொணிக்கும் இயலாமையும் மனம் கனக்கச் செய்கின்றன.

SELECTED ME said...

இந்தக் கவிதையை நிச்சயம் அப்துல் கலாம் படிக்க வேண்டும்!

SELECTED ME said...

படிக்கும்போது அழுதுவிட்டேன்.

தீபிகா(Theepika) said...

ஆற்றுப்படுத்த முடியா வலிகளுக்கு எழுத்தில் ஆறுதல் தர முயன்ற கீதா,பாராட்டிய தனசேகரன்,முல்லை அமுதன்,கண்ணீர் சொரிந்த நிலவன்பன்..ஆகியோருக்கும்,உண்மையின் முகம் புரிந்தும் பொதுத்தளத்தில் கருத்திட காரணங்களோடு தயங்கும் இன்னும் பலருக்குமாய்..நன்றிகள்.

JC Nithya said...

இங்கு இருந்து கொண்டிருப்பதற்காய் வெட்கப்படுகிறேன், தீபிகா. என்னால் என்ன செய்திருக்க முடியும், என்ன செய்ய முடியுமென தெரியாவிட்டாலும், எரிகின்ற மனங்களின் ஆறுதலுக்காய் என் பிரார்த்தனைகள்!

Post a Comment