More than a Blog Aggregator

Jan 21, 2012

சத்தங்களுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும்
மகன்




வெளிச்சங்கள் அணைக்கப்பட்ட வீடுகளுக்குள்
பயம் விழித்துக்கொண்டிருந்த ஓரிரவில்
வெள்ளை எருமைகளில் இருட்டில் வந்திறங்கிய
சப்பாத்துக்கள் அணிந்த
இரத்த தாகம் மிக்க மிருகங்கள்
துப்பாக்கிகளை நெற்றியில் பிடித்தபடி
எனது மகனையும்
ஒரு நாள் இழுத்துக்கொண்டு போயின.


நாய்களின் கதறல்களையும்...
ஆட்காட்டிக் குருவிகளின் அலறல்களையும்...
எருமைகள் கிழித்துக்கொண்டு போய்மறைந்த
கொஞ்ச நிமிடங்களில்
எதிரொலித்தபடி துரத்திக்கொண்டு வந்து
மனசில் குத்தி நின்றன.
தூரத்தே கேட்ட இரண்டு துப்பாக்கிச் சத்தங்கள்.

தவறுதலாக அழுத்தப்பட்ட விசைவில்லாகவோ
தங்களுக்குள் சுடுபட்ட மிருகங்களுடையதாகவோ
அல்லது
இருபது நாட்களுக்கு முன் காணாமல் போன
பள்ளிச் சீருடை மாணவன் மீது
கைகூப்பிய இறுதிக் கணங்களில்
நெற்றிப்பொட்டில் துளைக்கப்பட்டதாகவோ
இல்லை
கசக்கியெறியப்பட்ட ஒரு இளம்பெண்ணின்
மிச்சமிருக்கிற உயிரடக்கப் பிரயோகிக்கப்பட்டதாகவோ

இல்லாது போனால்...
மகனின் மணக்கோலம் பற்றிய
எனது கற்பனைகள் மீது
விழுந்த நெருப்பின் துளியாகவோ

எதுவாகவும் இருக்கக்கூடும்.
அந்த நடுச்சாமத்தின் அகாலஒலி.

பொலிஸார் தடியடி நடத்திக் கலைக்கிற
காணாமற் போனோர் ஊர்வலங்களுக்குள்
நான் தூக்கிப் பிடித்திருக்கிற
எனது மகனின் முகமும்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கக் கூடும்.



அறியப்படாத
ஆயிரம் துப்பாக்கிச் சத்தங்களுக்கான
காரணங்களுக்குள்.

----xxx----


தீபிகா.
03-12-2011
06.43 A.m

* குறிப்பு - இலங்கையில், அந்நாட்டின் சிங்கள இராணுவத்தினராலும், அரச புலனாய்வுப்படைகளாலும், மற்றும் ஆயுதக்குழுக்களாலும் நடுஇரவுகளில் வெள்ளை வாகனங்களில் வந்து கடத்திச் செல்லப்பட்டு பின் காணாமல் போனவர்களின் தொகை ஆயிரக்கணக்கானவை. இதுவரை அவர்கள் பற்றிய எந்த தகவலையும் சிங்கள அரசுகள் வெளிப்படுத்தவில்லை.

* அனைத்துலக காணாமற்போனோர் தினம் - ஆவணி 30.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

கவிதையைப் படிக்கவே மனம் பதறுதே
என்ன பின்னூட்டமிடுவது எனத் தெரியவில்லை
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு

Marc said...

கனத்த வலியுடன் கூடிய கவிதை.

Post a Comment