More than a Blog Aggregator

Nov 27, 2011


"கனவுகள் நிறைந்த நிலங்கள்



கல்லறையுண்ணிகள் புரட்டிப் போட்டிருக்கின்ற
வீரர்களது வித்துடல் நிலங்களில்
ஆடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அந் நிலங்களை
நாம் கட்டித்தழுவ முடியாதபடி
கழுகுகள் கண் பதித்திருக்கின்றன.

விதைநிலங்களிலிருந்து வெடித்தெழும் கனவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாகி
அங்கே வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

கனவுகள் படர்ந்திருக்கிற
வீரர்களின் பெயர்சுமந்த நடுகல்களுக்குள்ளால்
புகுந்து வருகிற காற்று
எங்களெல்லோரது சுவாசங்களுக்குள்ளும்
உள் நுழைகிறது.

அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அந்த அழிக்கப்பட்ட வெளிநிலத்தின் மீது
எவரும் கட்டிப்போட முடியா நிலவு
தீபஒளி பொழிகிறது.

மறைக்கப்பட நினைக்கிற
வீரர்களின் துயிலிடங்களில்
காற்றின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உறங்கிக்கிடந்த உயிர்விதைகளின் கனவுகள் 
ஊர்களெங்கும் இரகசியமாய் நிறைந்திருக்கிறது.

ஆழிகளை தாண்டிக்கொண்டு 
இன்னுமின்னும் ஆழமாய் வேரூன்றுகின்றன.
அழிக்கப்பட நினைக்கும்
அவர்களின் வரலாறுகள்.

ஒரு கடல்சூழ் நிலத்தில்
கருத்தரித்த கனவுக்குழந்தையின்
பிரசவப் போராட்ட வலியின் ஓலம்
எல்லா மேசைகளிலும் எதிரொலிக்கிறது.

சத்தியச் சாவடைந்தவர்களின்
வரலாற்று நிலங்களெங்கும்
அள்ளிச் செல்லப்பட முடியா
நமது கனவுகள் நிறைந்திருக்கின்றன.

------xxx-----------


தீபிகா.
25.11.2011. 
6.58 Pm.

No comments:

Post a Comment