More than a Blog Aggregator

Nov 26, 2011


"உறங்குமிடங்களிலிருந்து அகதிகளாக்கப்பட்ட உயிர்முகங்கள்"



 ஒளிர்கிற சுடர்களுக்கு மேலாகவும்
பூக்களின் இடைவெளிகளாலும்
எங்களை நோக்கி
அவர்கள் மிதந்து வருகிறார்கள்.
 

உறங்குமிடங்களிலிருந்தும்
அகதிகளாக்கப்பட்டிருக்கின்ற
எம் இருப்பிடங்களுக்காக அணிவகுத்த
உயிர்முகங்கள்
தமது கனவுகளை காவியபடி
எம் சுவாசங்களுக்குள்
திரும்பவும் நிரம்பிக் கொள்கிறார்கள்.

எம் விழிகளில் தகிக்கும்
பிரிவுத் துளிகளால்
அவர்களை ஆறுதல் படுத்த முடியவில்லை.
அந்த இளமைமிகு முகங்கள்
எமக்கான தமது கனவுகள் பற்றியே
மீளவும் மீளவும் கதைக்கிறார்கள்.

அதற்காய்
தாம் கொடுத்த விலைகளையும்
சுமந்த வலிகளையும்
மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறார்கள்.

ஏக்கம் வழியும் விழிகளோடு
எமைப் பார்த்து புன்னகைக்கும்
அவர்களை
சொரிகின்ற பூக்களாலும்
ஒளிர்விக்கின்ற வெளிச்சங்களாலும்
வணங்க முடிகிறதே தவிர
திருப்திப்படுத்தவே முடியவில்லை.

தம் ஈரக் கனவுகளை
மீண்டும் எம்மிடம் ஒப்படைத்துவிட்டு
காத்திருப்பதாய் சொல்லிக்கொண்டு
ஊதுபத்தி புகைகளில் கரைந்தபடி
மேகங்கள் வரைக்கும் சென்று மறைகின்றன.
ஈகமாகிய அவர்களின் ஆன்மாக்கள்.
------ ------ -------


தீபிகா.
24.11.2011.
12.50 P.m







No comments:

Post a Comment