More than a Blog Aggregator

Nov 24, 2011

சிவப்பு அணக்கொண்டா

எங்கே?
கொண்டுபோய் ஒளித்துவைக்க?

பலவேளைகளில்
சங்கீதம் பாடிக்கொண்டு
சிலவேளைகளில்
மிளகாய்த்தூளினை விசிறிவிடுகிற
இதனை எப்படி திருத்துவேன்?

என் கட்டளைகளெதற்கும் கட்டுப்படாமல்
உருண்டு திமிறி
வழுக்கிக்கொண்டு வெளியேறி
அதன் விசம்தடவிய
வார்த்தைகளின் வாலினை
காதுவழி வலிந்து செலுத்தி
முயற்குட்டி மனசுகளை
முழுதாய் விழுங்கி பின்னுமிழ்ந்து போட்டு
திரும்பிப்போய் பதுங்குகையில்
என் வாசங்களனைத்தும் நாற
நி்ர்வாணமாகி நிற்கிறேன்.

 பூவினிதழ்களுக்கும்...
புறங்கைகளுக்கும்...
முத்தமிடும்
அதே குகையின் வாசல்வழியாகத் தான்
அது
மனசுகளுக்கு குறிவைக்கின்றது.

காலத்தின் வாயின்வழி தெறித்துவிழும்
தீயின் சொற்களை ஞாபகக்காற்று தழுவிட
தீய்ந்து எரிகிற வலியில்
ஊதிப்பெருக்கிறது சினம்.

கோபங்கள் சன்னதம் கொள்கிற
அருவருக்கத்தக்க கணங்களில்
என்னத்தனை எலும்புகளையும்
தோற்கடித்துக்கொண்டு வென்றுவிடுகிறது
எலும்பில்லா சிவந்த சதைத்துண்டொன்று.

அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளை
சில மன்னிப்புக்களும்...
பல மௌனங்களும்...
அவ்வப்போது ஊதியணைத்து விடுகின்றன.

இருந்தாலும்... ...

என் வார்த்தைகளை பறித்தெடுத்து
ஆழமாய் அத்திவாரமிடப்பட்ட
முப்பத்திரெண்டு காவலரண்களையும்
உடைத்துக்கொண்டு
இதழ்வாசல் வழி அவற்றை வெளியெறியும்
இந்த சிவப்பு அணகொண்டாவை
எந்த பெட்டிக்குள் எத்தனை பூட்டுக்கொண்டு
பூட்டி வைப்பேன்?




தீபிகா
27-06-2010

நன்றி - முகமறியா புகைப்பட கலைஞருக்கு.

No comments:

Post a Comment