More than a Blog Aggregator

Feb 21, 2011

நட்சத்திரங்களற்ற வானம்





மேகங்களிடம்
நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு
பொட்டில்லா காதலி முகமாய்
வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது. 


பக்கத்துப் பிறைச்சந்திரனும்
மேகங்களோடு கூட்டுச் சேர்ந்து
நட்சத்திரங்களை சுருட்டியெடுத்த போதும் கூட
இலைகளோடு போட்டியிட்டுக் கொண்டு
தன் இருக்கைகளை சரிபார்த்தபடியிருந்த

உதய சூரியன்
இப்போ வானம்பாடிகளைத் தூதனுப்ப கேட்கிறது.


இடியும் மின்னலும்
ஒரு கடற்கரை மீதான வானத்தோடு
தம்முரசல்களை முடித்துக் கொண்டபோது
பட்டம் விட்ட காற்சட்டைச் சிறுவர்கள்
கீழே கருகிக் கிடந்தார்கள்.

புறாக்களும் குருவிகளுமாக பறந்த

வானத்திலிருந்து வல்லூறுகள்
எதனையும் விட்டுவைக்கவில்லை.


வானங்களை உடைத்துக் கொண்டு
எங்கும் இரத்தமழை பெய்தபோது
தாவரங்கள் தண்ணீரின்றி மாண்டன.
தேவதைகள் காட்சிதரா வானத்தைப் பார்த்தபடி
எல்லோரும் கைகூப்பிச் செத்தனர்.


மனிதச் சுனாமிகள் மச்சம் விழுங்கையில்
காதுகளுக்குள் சங்கீதங்களை கொழுவிக்கொண்டு
கறுப்பு முக்காடுகளை போர்த்தியபடி
பச்சை மாமிசங்களின் தோலுரிகிற காட்சிகளை
பார்த்துக் கொண்டிருந்த
குள்ள மனிதர்கள்
மஞ்சள் கண்களுடையவர்கள்
சுருள் தலைமுடியுடையோர்
சப்பட்டை மூக்குக்காரர்
வெள்ளைத் தோலார்.


எல்லோரும்.... இப்போ…
ஓட்டைகளோடிருக்கும் வானத்தின் துளைகளில்

பூக்கன்றுகளை நட்டுத் தருவதாகவும்..
அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு
பொம்மை தருவதாகவும்..
கணவனில்லாத சகோதரிகளுக்கு
வானவில் நிறத்தில் சேலை தருவதாகவும்..
கத்திக்கொண்டு ஓடி வருகிறார்கள்.

நட்சத்திரங்களி்ன் மீட்சி பற்றி
கேட்கிற வாய்களுக்குள்
வந்தவர்கள்
இனிப்புக்களை அள்ளி திணிக்கிறார்கள்.
வாய்த்தவர்களோ துப்பாக்கிகளை திணிக்கிறார்கள்.

இப்போ
அசிங்கமாய் தெரிகிற நட்சத்திரங்களற்ற சூரியன்
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு
சரிந்துகிடந்து எழுதிக்கொண்டேயிருக்கிறது

கடிதங்களும்-கவிதைகளும்.

வாழைக்குருத்துக்குள் விழுந்த விடிவெள்ளி
மீண்டும் வைரமாகுமென
பாட்டி சொல்லிக்கொண்டிருக்கிறாள்
வந்தவர்களின் காதுகளுக்குமாக சேர்த்து.

இருட்டாகவே இருக்கிறது பகலும்.
நட்சத்திரங்களற்ற வானத்தில்.

 *** முற்றும் ***

27.07.2010

12.13 am

1 comment:

கோவை நேரம் said...

மனதை பிசையும் வார்த்தைகளின் வெளிப்பாடு,,,,அருமை...

Post a Comment